April 2, 2013


பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை
-------------------------------------------------------

ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.

இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.

மேலும் இக்கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் அமைந்துள்ளது. மனிதனுடைய பிறப்பில் அவனுடைய சாதனை எதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பும் அவன் வளர்வதும் இறைவனுடைய அருளாலே நடந்துகொண்டிருக்கின்றது. எனவே இதில் மனிதன் தன்னை பெருமைப்படுத்திக்கொள்வதில் என்ன தத்துவம் அடங்கியிருக்கின்றது?


மேலும் இறைவன் நமக்கு விதித்த காலக்கெடுவில் ஓராண்டு கழிந்துவிட்டது எனக் கவலைப்படுவதைத் தவிர பிறந்த நாளில் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கின்றது?

இது பிற்காலத்தில் கிரிஸ்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட கொண்டாட்டமாகும். கிரிஸ்தவர்களின் கெட்ட கலாச்சாரத்தை நாம் பின்பற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

3456حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ رواه البخاري

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

''உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள்.

புகாரி (3456)

நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒருபோதும் பிறந்த தினம் கொண்டாடியதுமில்லை அவ்வாறு கொண்டாடுமாறு ஏவியதுமில்லை. இந்த நடைமுறை மார்க்கத்தில் புதிதாக புகுந்த பித்அத் ஆகும்.

"செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும்.புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் அனாச்சாரம் ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்" என்று நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி), நூல்: நஸயீ 1560)

சிலர் பிறந்த நாள் கொண்டாடுவது தவறு என்று தெரிந்தும் வாழ்த்துவது தவறில்லை என்று நினைக்கிறார்கள்.இந்த வாதம் அவர்களுடைய அறியமயையே காட்டுகிறது.ஒரு தவறை செய்பவருக்கும் அந்த தவறை ஆதரிப்பவர்களுக்கும் அதற்க்கு உண்டான தண்டனை வழங்கப்படும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.அதோடு அல்லாஹ் நின்று விடாமல் யாராவது தவறு செய்வதை கண்டால் அதை தடுக்க வேண்டும் என்றும் ஆணையிடுகிறான்.

صحيح مسلم حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح... وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ كِلاَهُمَا عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ - وَهَذَا حَدِيثُ أَبِى بَكْرٍ - قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ. فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ. فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ.

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

(அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) , நூல்: முஸ்லிம் 70)

எனவே பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நீங்கள் பிறரை அழைத்தாலும் பிறரை அழைக்காமல் உங்கள் குடும்பத்தினர் மட்டும் கொண்டாடினாலும் அது தவறு.

எதையும் தகுந்த காரணத்தோடு தான் இஸ்லாம் அணுகும் என்ற பொது விதியை கருத்தில் கொள்ள வேண்டும். நட்பு முறிந்து விடும், உறவுகளில் விரிசல் ஏற்படும், குடும்பங்களில் பிளவு உண்டாகும் என்ற காரணங்களைச் சொல்லி, இஸ்லாம் அனுமதிக்காத எந்தவொரு செயலையும் ஒரு முஸ்லிம் செய்யக்கூடாது.

இஸ்லாத்துக்குப் புறம்பான அனாச்சாரங்களில் - விழாக்களில் கலந்து கொள்வதும் அதற்குத்துணை போவதாகும் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

தூய இஸ்லாத்திற்காக நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் தங்களது குடும்பங்களைப் பிரிந்தார்கள், நட்புகளை தூக்கியெறிந்தார்கள். அந்த மார்க்கத்திற்குச் சொந்தக்காரர்களாகிய நாம் இன்று, இஸ்லாத்தில் இல்லாத பிறந்த நாள் விழாவுக்குச் செல்ல காரணங்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.

"ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்" (அல்குர்ஆன், 5:105)

''எம்மால் ஏவப்படாத எந்த செயலும் நிராகரிக்கப்பட வேண்டும்'' (நபிமொழி)

பிறந்த நாள் என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என அந்தத் தேதியில் சிறப்பான வரவேற்பு, சிறு விருந்து உபசாரங்களோடு பரிசுகளும் பறிமாறப்படுகின்றன. வரவேற்பு, விருந்து உபசாரங்கள், மற்றும் அன்பளிப்புகள் இவையெல்லாம் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும்படி இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஆனால் பிறந்த நாள் என்று ஒரு அனாச்சாரத்தையொட்டி இவைகள் நடப்பது இஸ்லாத்திற்கு முரணானது.

அன்பளிப்பு எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்வது. பிறந்தநாளில் கொடுக்கப்படும் அன்பளிப்பு, அதே பிறந்த நாளை நாம் கொண்டாடும் பொழுது, நாம் வழங்கிய அன்பளிப்புத் திரும்ப கிடைக்கும் என எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. வருடா வருடம் குறிப்பிட்டத் தேதியில் அன்பளிப்பு வழங்குவது கட்டாயக் கடமையாகி விடுகிறது. நம் பிறந்த நாள் விழாவுக்கு அவர் பரிசளித்திருக்கிறார், அவர் மகன் பிறந்த நாளைக்கு நாம் பரிசளிக்க வேண்டும் என்று இந்த அனாச்சாரம் சங்கிலித் தொடராக நீண்டு விட இது வாய்ப்பாக அமைகிறது.

இஸ்லாத்தில் அங்கீகாரமில்லாத பிறந்த நாள் விழா போன்ற நவீன செயல்பாடுகளிலிருந்து முஸ்லிம்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும். அறியாதவர்கள் பிறந்த நாள் விழாக்களைச் செயல்படுத்தினால், அவர்களுக்கு எடுத்துச் சொல்லி அதிலிருந்து அவர்கள் தவிர்ந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். தவிர்க்கவில்லையெனில் அவ்விழாக்களில் கலந்து கொள்ளாமல் நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன், 66:6)

பிறந்த தின வாழ்த்து கலாச்சாரம் என்பதே மேற்கத்திய பிற மதத்தவர்களுடைய கலாச்சாரம்தான். அந்த கலாச்சாரங்களை ஒரு முஸ்லிம் எப்படி தம் இல்லங்களில் நடைமுறைப்படுத்த முடியும்? உள்ளங்களில் இடங்கொடுக்க முடியும்? பிறந்த நாள் நிகழ்ச்சி என்ற பெயரில் வீடுகளில் கேக் வெட்டி பிஞ்சு உள்ளங்களில் நாமே வேற்றுக் கலாச்சாரத்தை விதைத்துக் கொண்டிருக்கிறோம்.

எவர் ஒருவர் பிறமதக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவரல்ல என்பது நபிமொழி
(அபூஹூரைரா ரலி - அபூதாவூத்)

எத்தகைய சமாதானம் கூறியும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்ற பிற மதக் கலாச்சாரங்களை அனுமதிக்க முடியாது என்பதை இந்த நபிமொழியின் கருத்தை ஆழமாக சிந்திக்கும்போது விளங்கலாம்.

இதில் எதையும் நபி (ஸல்) அவர்கள் செய்யாததிலிருந்து அது முழுக்க முழுக்க யூத நசாராக்களின் கலாசாரம் என்பதை அறிய முடிகிறது. ஈசா நபி காலம் தொட்டே இந்த பிறந்த நாள் கலாசாரம் யூத கிறிஸ்தவர்களிடையே இருந்து வந்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னும் இரண்டு காரணங்களால் பிறந்த நாள் கொண்டாடுவது தவறு.

ஒன்று : அது ஒரு மூட நம்பிக்கை. நீ இன்று பிறந்ததால் உனக்கு வாழ்த்துக்கள் என்று சொல்வதில் அறிவுக்கு பொருத்தமான எந்த வாதமும் இல்லை ! அவர் பிறந்து முப்பது வருடங்கள் ஆகியிருக்கும். அவர் பிறந்த அந்த குறிப்பிட்ட நாளில் வாழ்த்து சொன்னால் தான் அதில் அர்த்தம் இருக்கிறதே தவிர, இதன் பிறகு இந்த தேதி இதற்கு பிறகு இந்த மாதம் என்று நாமே ஒரு காலண்டரை அமைத்து வைத்துக்கொண்டு, இதோ நீ பிறந்த தேதி மீண்டும் வந்து விட்டது, ஆகவே உனக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னால் அது ஒரு மூட நம்பிக்கை அல்லாமல் வேறென்ன??

தேதியும் மாதமும் ஒத்து போய் இருப்பதால் வாழ்த்து சொல்கிறோம் என்று சொல்பவர்கள் வருடம் ஒத்து போகவில்லை என்பதை சிந்திக்கவில்லை !

வருடம் ஒத்து போகவில்லை என்றாலும் பரவாயில்லை, தேதியும் மாதமும் ஒத்து போய் விட்டதல்லவா, ஆகவே கொண்டாடலாம் என்று சொல்பவர்கள், வருடத்தை விட்டு விட்டு மாதத்தையும் தேதியையும் வைத்து பிறந்த நாள் கொண்டாடுபவர்கள், மாதத்தை விட்டு விட்டு, ஒவ்வொரு மாதமும் ஒத்துப்போக கூடிய தேதியில் பிறந்த நாள் கொண்டாடுவார்களா? அல்லது, தேதியும் மாதமும் ஒத்து போக வேண்டும் என்பது போல பிறந்த கிழமையும் ஒத்து போக வேண்டும் என்பதற்காக வாரா வாரம் கொண்டாடுவார்களா?
இதிலெல்லாம் அறிவுடன் செயல்படுவார்களாம் ! இப்படி கொண்டாடுவதெல்லாம் மூட நம்பிக்கையாம் !!!! என்னே இவர்களது அறிவு.

பிறந்த நாள் கொண்டாடுவது தவறு என்பதற்கான அடுத்த காரணம், அது ஒரு போலி கொண்டாட்டம். வாழ்த்துக்கள் என்றோ happy birthday என்றோ சொல்வதில் யாருமே உண்மையாக இருக்கவில்லை.

காரணம், ஒரு குழந்தை பிறந்த அந்த ஒரு நாள் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் மகிழ்ச்சியே தவிர, அதன் பிறகு வரக்கூடிய எந்த பிறந்த நாளும் சம்மந்தப்பட்டவனுக்கு மகிழ்ச்சியை தராது என்பது தான் யதார்த்தம் !

ஆக என் அன்பு இஸ்லாமிய சொந்தங்களே பகுத்தறிவையும் அடகுவைத்துவிட்டு அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிதராதா இத்தகைய அனாச்சாரங்களை எமது வாழ்வில் இருந்து தூக்கி எறிந்துவிடுவோம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவோம்.

___________________________________
இத்தொகுப்பை பிறரின் தொகுப்பில் இருந்து கோர்க்கப்பட்டு செய்தது அல்லாஹ் அச்சகோதர்களுக்கு நல்லருல்பாளிப்பான ஜசாகல்லாஹ்