October 18, 2011

ஹதீஸ் கலை ஓர் அறிமுகம்... தொடர் - 1
















(அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் இருபதாண்டு காலமாக மக்கள் ஹதீஸ்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்றனர். புகாரி முஸ்லிம் திர்மிதீ போன்ற ஹதீஸ் நூற்களின் தமிழாக்கங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

ஆலிம்களின் வாய்களிலிருந்து உதிர்ந்தவை எல்லாம் ஹதீஸ் என்ற நிலை மாறி நீங்கள் சொன்னது சரியான ஹதீஸா? பலவீனமான ஹதீஸா? என்று கேட்கும் காலம் வந்திருக்கின்றது. உண்மையில் இது பாராட்டத்தக்க அம்சமாகும். மக்கள் இந்த ஹதீஸ் துறையில் ஓரளவு ஈடுபாடு காட்டி வருகின்றார்கள் என்பதையே இது காட்டுகின்றது.

எனினும் ஹதீஸ் துறையில் ஸஹீஹ் என்றால் என்ன? லயீஃப் என்றால் என்ன? இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்றால் என்ன? என்று தெரிந்து வைத்திருப்பவர்கள் மிக சொற்பமே! ஏகத்துவப் பணிகளில் ஈடுபாடு கொள்வோர் ஹதீஸ் துறையில் உள்ள இந்த கலைச் சொற்களை நன்கு தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். இந்த நோக்கத்தை நிறைவு செய்யவே இந்தத் தொடர்!
ஹதீஸ் கலை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள் செயல்கள் அங்கீகாரங்கள் ஆகிய மூன்றையும் ஹதீஸ்கள் என்பார்கள்.

ஹதீஸ்களை அறிவிக்கக் கூடிய அறிவிப்பாளர்களின் தகுதி எண்ணிக்கை அறிவிப்பாளர்களிடையே தொடர்பு போன்ற தன்மைகளின் அடிப்படையில் ஹதீஸ்களை அறிஞர் பெருமக்கள் தரம் பிரித்துள்ளனர்.

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம்.

1. ஸஹீஹ்
2. மவ்ளூவு
3. மத்ரூக்
4. ளயீஃப்

எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். இவற்றில் ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே நாம் நடைமுறைப் படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக் கூடாது.

இந்த நான்கு வகைகளையும் பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.
________________________________________________________________

  • 1. ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய ஒரு செய்தியை அறிவிக்கும் போது இன்று நாம் அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறுவதில்லை. நூல் வடிவில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதால் அது தேவையுமில்லை.

ஆனால் நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த இரண்டாவது மூன்றாவது நூற்றாண்டு கால கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைக் கூறுவதென்றால் தனக்குக் கூறியவர் யார்? என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் ஹதீஸ் கலை அறிஞர்கள் அந்த ஹதீஸைத் தமது நூற்களில் பதிவு செய்வார்கள்.

தம்ககு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் அதை ஹதீஸ் என்று ஒப்புக் கொள்வார்கள்.

எல்லா ஹதீஸ்களும் இந்த வகையில் தான் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக திர்மிதீயில் இடம்பெற்றுள்ள முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம்.

தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது'' என்பது திர்மிதீயின் முதலாவது ஹதீஸ்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த செய்தியைக் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர் ஆவார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இதை நேரடியாகக் கேட்டு அறிவிக்கின்றார்.

இந்தச் செய்தியை இப்னு உமர் (ரலி) யாரிடத்தில் கூறினார்? அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார்? முஸ்அப் பின் ஸஃது என்பார் தான் இதை இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்.

முஸ்அப் பின் ஸஃதிடமிருந்து இதைக் கேட்டவர் ஸிமாக் என்பார்.

ஸிமாக்கிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்கள் இரண்டு பேர். 1. இஸ்ராயீல், 2. அபூஅவானா ஆகிய இருவரும் ஸிமாக்கிடமிருந்து இதைக் கேட்டுள்ளனர். இவர்களிடமிருந்து இமாம் திர்மிதீ எப்படி அறிந்து கொண்டார் என்பதை கீழ்க்கண்ட வரைபடம் மூலம் விளங்கலாம்.

1- நபிகள் நாயகம் (ஸல்)
இப்னு உமர் (ரலி)
முஸ்அப் பின் ஸஃது
ஸிமாக் பின் ஹர்பு
அபூ அவானா
குதைபா
ஹன்னாத்
திர்மிதீ

2- நபிகள் நாயகம் (ஸல்)
இப்னு உமர் (ரலி)
முஸ்அப் பின் ஸஃது
ஸிமாக் பின் ஹர்பு
இஸ்ராயீல்
வகீவு
ஹன்னாத்
திர்மிதீ

மேற்கண்ட இரு வழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்குக் கிடைத்துள்ளது. இவ்வளவு விபரங்களையும் இந்த ஹதீஸில் திர்மிதீ இமாம் கூறுகின்றார். இப்படி ஒவ்வொரு ஹதீசுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கிலித் தொடரை அவர் கூறுகின்றார்.

இந்தச் செய்தி இமாம் திர்மிதீ அவர்களுக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.

அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

அவர்கள் ஒவ்வொருவரும் யார் வழியாக தான் அறிவிக்கின்றாரோ அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.

இந்தத் தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான - ஸஹீஹான ஹதீஸ்கள் என்பர். அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இருக்கக் கூடாது.

ஆதாரப்பூர்வமான - ஸஹீஹான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

  • 2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)

ஏற்கப்படாத ஹதீஸ்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது மவ்ளூவு என்ற வகை ஹதீஸ்களாகும். மவ்ளூவு என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத - செய்யாத - அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.

திருக்குர்ஆனுக்கும் நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர் முரணாகவும் எந்த வகையிலும் விளக்கம் கொடுக்க முடியாதவையாக அமைந்தவை.

புத்தியில்லாதவனின் உளறலுக்கு நிகராக அமைந்தவை.

அறிவிப்பாளரில் ஒருவரோ, பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.
இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்.

மேற்கண்ட அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதன் அடிப்படையில் அமல் செய்யக் கூடாது. இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.

(இது குறித்து முன்பே கூறியுள்ளோம் என்பதை நிரூபிக்க் இதுவே போதுமானதாகும். ஆயினும் ஹதீஸ் கலை ப்ற்றி நேயர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதை முழுமையாக வெளியிடுகிறோம்)

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப் பற்றி இந்த விபரம் போதுமென்றாலும் இதில் அதிக விழிப்புணர்வு நமக்கு அவசியம் தேவை என்பதால் இது குறித்து இன்னும் சில விபரங்களைப் பார்ப்போம்.

முதலில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் ஏன் எப்படி சமுதாயத்தில் நுழைந்தன? ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டதன் நோக்கம் என்ன? என்பதை அறிந்து கொள்வோம்.

1. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. இந்த வளர்ச்சி மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய் விடுமோ தங்கள் தலைமை பறி போய் விடுமோ வருமானம் தடைப்பட்டுப் போய் விடுமோ என்றெல்லாம் கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர்.

இஸ்லாத்தின் பெருவளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும், எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டி விட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியை பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்கு போட்டார்கள்.

திருக்குர்ஆனில் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாது என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

நம்ப முடியாத உளறல்களையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகப் பரப்பலானார்கள்.

இவற்றையெல்லாம் கேட்பவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள்.

யாரேனும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதாயிரம் நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு நாக்கும் எழுபதாயிரம் பாஷைகளைப் பேசும்.

கத்தரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.

பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இதயத்தை மென்மையாக்கும்.

நெல் ஒரு மனிதனாக இருந்தால் இது மிகவும் சகிப்புத் தன்மையுடையதாக இருந்திருக்கும்.

உங்கள் உணவில் கீரைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது ஷைத்தானை விரட்டியடிக்கும்.

ஆகாயத்தில் உள்ள பால்வெளி, அர்ஷின் கீழ் இருக்கும் பாம்பின் வியர்வையினால் படைக்கப்பட்டது.

சூரிய வெளிச்சத்தால் சூடாக்கப்பட்ட தண்ணீரில் குளிக்காதே! அது வெண் குஷ்டத்தை ஏற்படுத்தும்.

தர்மம் செய்ய ஏதும் கிடைக்காவிட்டால் யூதர்களையும் கிறித்தவர்களையும் சபியுங்கள்! அது தர்மம் செய்ததற்கு நிகராக அமையும்.

பசுமையான பொருட்கள், ஓடுகின்ற தண்ணீர், அழகிய முகம் ஆகியவற்றைப் பார்ப்பது பார்க்கும் திறனை அதிகரிக்கும்.

அழகான முகத்தைப் பார்ப்பது ஒரு வணக்கமாகும்.

கண்கள் நீல நிறமாக இருப்பது ஒரு பாக்கியமாகும்.

மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தும்.

சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

முட்டையும் பூண்டும் சாப்பிட்டால் அதிகமான சந்ததிகள் பெற முடியும்.

பெண்களிடம் ஆலோசனை கேளுங்கள்! ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள்!

160ஆம் ஆண்டுக்குப் பிறகு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதை விட நாய் வளர்ப்பது மேலாகும்.

ஆஷுரா நாளில் அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்தான்.

இப்படி ஏராளமான பொய்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டினார்கள்.

நடைமுறையில் இவை யாவும் பொய் என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது. கத்தரிக்காய் அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இல்லை. மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தவும் இல்லை. பருப்பு சாப்பிடுவதற்கும் இதயம் இளகுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. (பருப்பு சாப்பிடும் கூட்டம் தான் பள்ளிவாசலை இடித்தனர்) கீரைக்கும் ஷைத்தானுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அர்ஷுக்குக் கீழே பாம்பும் கிடையாது. அதிலிருந்து பால்வெளி படைக்கப்படவும் இல்லை.

சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட சிறிய குளம் குட்டைகளில் குளிக்கும் இலட்சக்கணக்கான மக்கள் யாருக்கும் குஷ்டம் வரவில்லை. ஓடுகின்ற தண்ணீருக்குப் பக்கத்தில் வசிப்பவர்கள் ஊட்டியில் பசுமையான இடங்களை அன்றாடம் பார்ப்பவர்களும் அழகான முகம் படைத்த மனைவியைப் பெற்றவர்களும் பார்வைக் குறைவுக்கு ஆளாகின்றனர்.

நீல நிறக் கண்கள் படைத்தவர்கள் தரித்திரம் பிடித்தவர்களாகவும் இருக்கின்றார்கள். வானம் பூமியைப் படைத்து இரவு பகல் ஏற்பட்ட பிறகு தான் ஆஷுரா நாளோ வேறு நாளோ ஏற்படும். அதற்கு முன்னால் ஆஷுரா நாளும் வேறு எந்த நாளும் இருந்திருக்க முடியாது.

இவற்றைப் பார்க்கும் போது இவ்வாறு கூறியவர்கள் சிந்தனைத் தெளிவில்லாதவர்களாக இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அவர் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படும் என்ற நோக்கத்தில் தான் மேற்கண்ட செய்திகள் புனையப்பட்டுள்ளன.

2. ஆர்வக் கோளாறு

மார்க்கத்தில் ஆர்வமிருந்தும் அறிவு இல்லாத மூடக் கூட்டத்தினர் நல்ல நோக்கத்தில் ஹதீஸ்களை சுயமாகத் தயாரித்தனர்.

மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களுக்கு குர்ஆனிலும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எவ்வளவோ சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. அவை இவர்களுக்குப் போதாததால் அந்த வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கினார்கள்.

இருக்கின்ற வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கியதோடு நின்று விடவில்லை. புதிது புதிதாக வணக்கங்களையும் பொய்யான ஹதீஸ்கள் மூலம் உருவாக்கினார்கள்.

நூஹு பின் அபீ மர்யம் என்பவர் திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனித்தனி சிறப்புகளைக் கூறும் ஹதீஸ்களைத் தயாரித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

மோதிரம் அணிந்து தொழுவது மோதிரம் அணியாமல் தொழும் எழுபது தொழுகைகளை விடச் சிறந்தது.

தலைப்பாகை அணிந்து தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் இருபத்தி ஐந்து தொழுகைகளை விடச் சிறந்தது.

நகங்களை இன்னின்ன நாட்களில் வெட்ட வேண்டும். முதலில் இந்த விரலில் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.

முஹம்மத் என்ற பெயரைக் கேட்டவுடன் கட்டை விரல் நகங்களால் கண்களில் தடவுதல்
ரஜப் 27க்கு சிறப்புத் தொழுகை, நோன்பு நோற்பது.

ஷஅபான் 15ம் இரவில் நூறு ரக்அத் தொழுவது மற்றும் அந்த இரவின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள்.
ரஜப் மாதத்தின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள்.

குறிப்பிட்ட பகல், குறிப்பிட்ட இரவுக்கென்று குறிப்பிட்ட வணக்கங்கள்.
ஆஷுரா நாளைப் பற்றிக் கூறப்படும் சிறப்புகள் அடங்கிய ஹதீஸ். (அந்நாளில் மூஸா நபி காப்பாற்றப்பட்டார்கள். அந்நாளில் நோன்பு நோற்க வேண்டும் எனும் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை)

சூரத்துல் பாத்திஹா சூரத்து ஆலஇம்ரான் சூரத்துல் பகரா ஆயத்துல் குர்ஸீ பகராவின் கடைசி இரு வசனங்கள் கஹ்பு அத்தியாயம் குல்ஹுவல்லாஹு அத்தியாயம் குல்அவூது பிரப்பில் ஃபலக் குல்அவூது பிரப்பின்னாஸ் அத்தியாயங்கள் இதா ஸுல்ஸிலத் குல்யா அய்யுஹல் காஃபிரூன் தபாரக்கல்லதீ போன்றவை தவிர மற்ற அத்தியாயங்களின் சிறப்புகள் பற்றி கூறப்படும் ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப்பட்டவை.

அமல்களில் ஆர்வமூட்டுவதாக எண்ணிக் கொண்டு இட்டுக் கட்டப்பட்டவைகளுக்கு இவை உதாரணங்கள்.

3. தனி மரியாதை பெறுவதற்காக

மார்க்க அறிஞர்களுக்கு மற்ற மதங்களில் உள்ளது போன்ற அந்தஸ்து இஸ்லாத்தில் இல்லை. மற்ற மதங்களில் கடவுளின் ஏஜென்டுகளாக மதகுருமார்கள் மதிக்கப்படுகின்றனர்.

புரோகிதர்களாகச் செயல்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் அதை அறவே ஒழித்து விட்டது.

இதைக் கண்ட போலி அறிஞர்கள் மற்ற மதங்களில் உள்ளது போல் தங்களுக்கும் மரியாதை வேண்டும் என்பதற்காக ஹதீஸ்களை உருவாக்கிக் கொண்டார்கள்.

ஆலிமுக்கு முன்னால் மாணவன் அமர்ந்தவுடன் அவனுக்கு அல்லாஹ் தனது அருளின் எழுபது வாசல்களைத் திறந்து விடுகின்றான். அவரை விட்டு எழும் போது அன்று பிறந்த பாலகனைப் போன்று எழுகின்றான். அவன் கற்ற ஒவ்வொரு எழுத்துக்காகவும் ஒரு ஷஹீதுடைய நன்மையைத் தருவான்.

சொர்க்கத்திலும் உலமாக்கள் தேவைப்படுவார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அல்லாஹ்வை சொர்க்கவாசிகள் சந்திப்பார்கள். வேண்டியதைக் கேளுங்கள் என்று அல்லாஹ் கூறுவான். அவர்களுக்கு என்ன கேட்பது என்று தெரியாததால் உலமாக்களிடம் சென்று கேட்பார்கள். இன்னின்னதைக் கேளுங்கள் என்று உலமாக்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஒரு ஆலிமோ அல்லது ஆலிமுக்குப் படிக்கும் மாணவரோ ஒரு ஊரைக் கடந்து சென்றால் அவ்வூரில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நாற்பது நாட்கள் வேதனையை அல்லாஹ் நிறுத்தி விடுவான்.

ஒரு ஆலிமுடைய சபையில் அமர்வது ஆயிரம் ரக்அத்கள் தொழுவதை விடச் சிறந்தது.
என் சமுதாயத்தில் உலமாக்கள் பனீ இஸ்ரவேலர்களின் நபிமார்களைப் போன்றவர்கள்.
ரகசியமான ஒரு இல்மு (ஞானம்) உள்ளது. அதை எனது நேசர்களுக்கு மட்டும் தான் நான் வழங்குவேன். எந்த மலக்கும் எந்த நபியும் இதை அறிய முடியாது என்று அல்லாஹ் கூறுவதாக அறிவிக்கப்படும் ஹதீஸ்.

ஒரு ஆலிமை யாரேனும் அவமானப்படுத்தினால் கியாமத் நாளில் மக்கள் மத்தியில் வைத்து அல்லாஹ் அவரை அவமானப்படுத்துவான்.

யாரேனும் உலமாக்களைச் சந்தித்தால் அவர் என்னைச் சந்தித்தவர் போலாவார். உலமாக்களிடம் முஸாபஹா செய்தால் அவர் என்னிடம் முஸாபஹா செய்தவர் போன்றவராவார்.

ஆலிமுடைய பேனாவின் மைத்துளி ஆயிரம் ஷஹீதுகளின் இரத்தத்தை விடச் சிறந்தது.
இவையெல்லாம் போலி மார்க்க அறிஞர்கள் தங்களது மதிப்பை உயர்த்திக் கொள்வதற்காக இட்டுக்கட்டியவையாகும்.

4. மன்னர்களை மகிழ்விக்க

மன்னர்களின் தவறுகளை நியாயப்படுத்தவும், அவர்களுக்கு மக்கள் அதிகமான மரியாதை தரவேண்டும் என்பதற்காகவும் போலி அறிஞர்கள் பொய்யான ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்கள்.
மன்னர் மஹ்தி என்பவரின் ஆட்சியின் போது, அவருக்கேற்ப ஹதீஸ்களை இட்டுக்கட்டிய

கியாஸ் பின் இப்ராஹீம் என்பவர் இதற்கு உதாரணமாகக் கூறப்படுகின்றார்.

மன்னர்களுக்குத் தண்டனை இல்லை.

மன்னரின் அனுமதியின்றி ஜும்ஆ இல்லை.

என்பன போன்ற ஹதீஸ்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இது மன்னர்களுக்காகச் சொன்னதால் இவை பிரபலமாகவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இத்தகைய பொய்கள் கிடைக்கின்றன.

5. இயக்க வெறி

மத்ஹபு வெறி இயக்க வெறி இனவெறி ஒரு மனிதன் மீது கொண்ட பக்தி வெறி போன்ற காரணங்களுக்காகவும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.

மத்ஹபு இமாம்களைப் புகழ்ந்தும் இகழ்ந்தும் தயாரிக்கப்பட்ட ஹதீஸ்கள்.

அலீ (ரலி)யைப் புகழ்ந்தும் மற்ற நபித்தோழர்களை இகழ்ந்தும் கூறக்கூடிய ஹதீஸ்கள்
துருக்கியர் சூடானியர் அபீசீனியர் பாரசீகர் போன்றவர்களைப் புகழ்ந்தும் இகழ்ந்தும் உருவாக்கப்பட்டவை.

ஒரு மொழியைப் புகழ்ந்தும் இன்னொரு மொழியை இகழ்ந்தும் கூறுகின்ற ஹதீஸ்கள்.
நெசவு விவசாயம் போன்ற தொழில்களின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஹதீஸ்களும் இந்த வகையைச் சேர்ந்தவையாகும்.

இந்த வகையில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஷியாக்கள். அலீ (ரலி)யின் சிறப்பைக் கூறும் வகையில் இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் கணக்கிலடங்காது.

இவை அனைத்தும் இயக்க வெறியின் காரணமாக இட்டுக் கட்டப்பட்டவையாகும்.

6. பேச்சைப் பிழைப்பாக்கியவர்கள்

மக்கள் மத்தியில் உருக்கமாகவும் சுவையாகவும் உரை நிகழ்த்தி அதன் மூலம் அன்பளிப்பு பெறும் ஒரு கூட்டத்தினர் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் நடமாடி வந்தனர்.

நீண்ட நேரம் புதுப்புது விஷயங்களைப் பேசி மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் தான் இந்த வகையில் அதிகம் காணப்படுகின்றன. இவர்கள் எந்த அளவுகோலும் வைத்திருப்பதில்லை. அன்றைய தினம் கைதட்டல் பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் கூறுவார்கள். இவர்கள் பெரும்பாலும் வரலாறுகளில் தான் கைவரிசை காட்டினார்கள்.

ஸவ்ர் குகையில் சிலந்தி வலை பின்னியது.
புறா முட்டையிட்டது.

இரண்டு உமர்களில் ஒருவர் மூலம் இஸ்லாத்தைப் பலப்படுத்து என்று நபிகள் நாயகம் (ஸல்) துஆ கேட்டது

அபூஜஹ்லுடன் நபிகள் நாயகம் (ஸல்) மல்யுத்தம் செய்தது.

சந்திரன் பிளந்து பூமிக்கு வந்து நபிகள் நாயகத்தின் சட்டைக்குள் நுழைந்து இரு கைகள் வழியாக இரு பாதிகளாக வெளியே வந்தது.

ஹிழ்ர் இஸ்மாயீல் ஆகிய நபிமார்கள் உயிருடன் இருக்கின்றார்கள். மினாவில் ஆண்டு தோறும் அவர்கள் சந்தித்துக் கொள்கின்றார்கள் என்ற ஹதீஸ்கள்.

மறைந்த சூரியன் அலீ (ரலி) அவர்களுக்காக மீண்டும் உதித்தது.
முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டவர் சொர்க்கம் செல்வார் என்பது.
எதிர்காலத்தில் இந்த வருடத்தில் இது நடக்கும்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அது நடக்கும்.
செஸ் விளையாடுபவன் சபிக்கப்பட்டவன்.

இப்படியெல்லாம் இட்டுக்கட்டினார்கள். மக்கள் புதுமையாகப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருந்ததால் நல்ல கருத்துக்கள் அடங்கிய பழமொழிகள் தத்துவங்கள் ஆகியவற்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அரங்கேற்றியவர்களும் இவர்களே!

அன்பு அதிகமானால் மரியாதை போய்விடும்.

சிறிய கவளமாக உண்ண வேண்டும். மென்று சாப்பிட வேண்டும்.
கஞ்சன் அல்லாஹ்வின் பகைவன்.
தட்டு சிறியதாக இருப்பதில் பரகத் உள்ளது.
சிறிது நேரம் சிந்திப்பது ஒரு வருடம் வணங்குவதை விடச் சிறந்தது.
நாட்டுப்பற்று ஈமானில் ஒரு பகுதி.
வறுமை எனக்குப் பெருமை.
உண்ணும் போது பேசக் கூடாது.
தடுக்கப்படட்டவைகள் இனிமையாகத் தெரியும்.
ஒருவனுக்கு எது தெரியவில்லையோ அதற்கு அவன் எதிரியாக இருப்பான்.
அடுத்தவனுக்குக் குழி வெட்டியவன் அதில் வீழ்வான்.
தெரியாது என்று கூறுவது பாதிக் கல்வியாகும்.
நபிகள் நாயகத்தின் வியர்வையிலிருந்து தான் ரோஜா படைக்கப்பட்டது.
நல்லவர்கள் செய்யும் நல்ல காரியங்கள் மிக நல்லவர்களுக்குக் கெட்டதாகத் தெரியும்.
முஃமினின் உமிழ்நீர் நோய் நிவாரணியாகும்.
தனிமையில் தான் ஈமானுக்குப் பாதுகாப்பு.
பல் துலக்குவது பேச்சாற்றலை அதிகரிக்கும்.
நல்லடியார்களைப் பற்றிப் பேசினால் அங்கே அருள் இறங்கும்.
வாதத் திறமையுள்ளவர்களிடம் நல்ல செயல்கள் இருக்காது.
எந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருக்கின்றார்களோ அங்கே நிச்சயம் ஒரு வலியுல்லாஹ் இருப்பார். ஆனால் அவர்கள் அதை அறிய மாட்டார்கள். அவரும் கூட தான் வலியுல்லாஹ் என்பதை அறிய மாட்டார்.
நோயாளி முனகுவது தஸ்பீஹ் ஆகும்.
சாவதற்கு முன் செத்து விடுங்கள்.
அறிவு இல்லாதவனுக்கு மார்க்கம் இல்லை.
அலீ (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செய்த வஸிய்யத் என்ற பெயரில் கட்டுக்கதைகள்.

இப்படி ஏராளமான ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.

7. சுயலாபத்திற்காக இட்டுக்கட்டியோர்

ஒவ்வொருவரும் தாம் சார்ந்துள்ள துறையைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துச் சொன்னதாக இட்டுக்கட்டினார்கள்.

இவர்களில் மகாக் கெட்டவர்கள் வைத்தியர்களாவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மருத்துவம் கற்றுக் கொடுக்க அனுப்பப்படவில்லை. தேன் பேரீச்சம்பழம் கருஞ்சீரகம் போன்ற மிகச் சில பொருட்களின் சில மருத்துவ குணம் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆனால் யூனானி வைத்தியர்கள் என்ற பெயரில் உருவான சில பித்தலாட்டக்காரர்கள் நபிவழி மருத்துவம் என்று பெயர் சூட்டிக் கொண்டு ஏராளமான ஹதீஸ்களை இட்டுக்கட்டியுள்ளனர்.
இவர்கள் செய்யும் எல்லா வைத்தியமும் நபிவழி மருத்துவம் என்றனர்.

ஒவ்வொரு நோய்க்கும் நபி (ஸல்) அவர்கள் மருந்து கூறியதாகச் சித்தரித்தனர். ஒவ்வொரு பொருளின் மருத்துவ குணம் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாகவும் இட்டுக்கட்டினார்கள்.
இன்றும் கூட இந்த யூனானி வைத்தியர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரில் கூறுவதில் 99 சதவிகிதம் இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய்யாக இருப்பதைக் காணலாம்.

8. மூளை குழம்பியவர்களின் உளறல்கள்

சிலர் முதுமையின் காரணமாக - மூளை குழம்பியதன் காரணமாக - நினைவாற்றல் குறைவு காரணமாக பொய் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் பொய்யான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் சில உதாரணங்களைத் தான் இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
நல்லறிஞர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் தனியாக நூற்களையே எழுதியுள்ளனர்.

இப்னுல் ஜவ்ஸீ முல்லா அலீ காரி சுயூத்தி போன்ற அறிஞர்களின் நூற்கள் இவற்றில் பிரபலமானவையாகும்.

தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள்.

இந்தப் பொய்களை இவர்கள் களையெடுக்கும் முயற்சியில் இறங்காவிட்டால் இஸ்லாத்திற்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் இன்றைக்கும் கூட மார்க்க அறிஞர்கள் இந்தப் பொய்களை மேடைகளிலும் ஜும்ஆப் பிரசங்கங்களிலும் கூறி வருகின்றார்கள் என்பது தான் வேதனையான ஒன்று! குறைந்தபட்சம் இட்டுகக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் பற்றிய நூற்களையாவது மதரஸாக்களின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

ஹதீஸ் கலையின் நான்கு வகையான தலைப்புகளில் ளயீஃப் மற்றும் மவ்ளூவு ஆகியவற்றைப் பற்றி அறிந்தோம். அடுத்து மூன்றாவது வகையான மத்ரூக் என்பதைப் பற்றி பார்ப்போம்.

  • 3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)

மவ்ளூவு எனும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுக்கு அடுத்த நிலையில் அமைந்தவை மத்ரூக் எனப்படும் ஹதீஸ்களாகும்.

அறிவிப்பாளர்களில் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் இடம் பெறுவது மத்ரூக் எனப்படும். ஹதீஸ்களில் அவர் பொய் கூறினார் என்பது நிரூபிக்கப் படாவிட்டாலும் பொதுவாக அவர் பொய் பேசக் கூடியவர் என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் மத்ரூக் எனப்படும்.
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுக்கும் மத்ரூக் எனும் ஹதீஸ்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மவ்ளூவு என்றால் அறிவிப்பாளர் பொய்யர் என்று சந்தேகமற நிரூபிக்கப் பட்டிருக்கும். மத்ரூக் என்பதில் பொய்யர் என்று நிரூபிக்கப் பட்டிருக்காது. எனினும் பரவலாக அவர் மேல் பொய்யர் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

மவ்ளூவு, மத்ரூக் ஆகிய இரண்டுமே அடியோடு நிராகரிக்கப்படும் என்பதில் எந்த அறிஞரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.

ஹதீஸ் கலையின் ஸஹீஹ் மவ்ளூவு மத்ரூக் ளஃயீப் ஆகிய நான்கு தலைப்புகளில் முதல் மூன்று தலைப்புகளை இது வரை பார்த்துள்ளோம். இனி நான்காவது வகையான ளயீஃப் என்பதன் விளக்கத்தைப் பார்ப்போம்.

  • 4. ளயீஃப் (பலவீனமானவை)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா இல்லையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியவை ளயீஃப் எனப்படும். அந்தச் சந்தேகம் பல காரணங்களால் ஏற்படலாம். காரணம் எதுவாயினும் சந்தேகத்துக்குரியவற்றை நாம் பின்பற்றக் கூடாது.

சந்தேகம் ஏற்பட்டால் ஏன் பின்பற்றக் கூடாது?

உனக்குத் திட்டவட்டமான அறிவு இல்லாததைப் பின்பற்றாதே (அல்குர்ஆன் 17:36) என்று அல்லாஹ் கூறுகின்றான். உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதின் பால் சென்று விடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (அறிவிப்பவர்: ஹஸன் (ரலி) நூற்கள்: திர்மிதீ அஹ்மத் ஹாகிம்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா என்று சந்தேகம் வந்தால் அதைப் பின்பற்றுவது தடை செய்யப்பட்டுள்ளதை மேற்கண்ட ஆதாரங்கள் கூறுகின்றன.

பலவீனமான ஹதீஸ்கள் நூறு இருந்தாலும் அவை ஒருக்காலும் பலமானதாக ஆகாது. நூறு நோய்கள் இருந்தால் நோய் அதிகமாகுமே தவிர நோய் போகாது.

அந்தச் சந்தேகம் எப்படியெல்லாம் ஏற்படுகின்றது என்பதைப் பொறுத்து பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ளயீஃபான ஹதீஸ்களின் வகைகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொடரும்...
 _______________________________________________
Jazakallah www.onlinepj.com