October 18, 2011

ஹதீஸ் கலை ஓர் அறிமுகம்... தொடர் - 3




பலவீனமான ஹதீஸ்கள் எவ்வாறு வகைப்படுத்தப் படுகின்றன என்பதைப் பார்த்து வருகின்றோம். பின்வரும் விதமாகவும் ஹதீஸ்கள் வகைப்படுத்தப் படுகின்றன.

  • 1. முள்தரப் (இதற்குக் குழப்பமானது என்று பொருள்.)

முள்தரப் என்பதும் ஏற்கத் தகாத, பலவீனமான ஹதீஸ்களில் ஒரு வகையாகும்.

ஒரு ஆசிரியரிடமிருந்து ஒரு ஹதீஸைப் பல மாணவர்கள் செவியுற்று, ஒருவர் மட்டும் மற்றவர்கள் அறிவிப்பதற்கு முரணாக அறிவித்தால் அது ஷாத் எனப்படுகின்றது என்பதை ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம்.

முள்தரப் என்பதும் ஓரளவு இது போன்றது தான் என்றாலும் இரண்டுக்கும் முக்கியமான வித்தியாசம் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட செய்தியைப் பலரும் அறிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் அறிவிப்பதற்கு மாற்றமாக சிலர் அறிவிக்கின்றார்கள். இவர்கள் ஒரு ஆசிரியர் வழியாக அறிவிக்கவில்லை.

வெவ்வேறு ஆசிரியர்கள் வழியாக இப்படி அறிவிக்கின்றார்கள் என்றால் அதற்கு முள்தரப் எனப்படும்.
ஒரு சம்பவம் மக்காவில் நடந்ததாக ஐந்து பேர் அறிவிக்க, மதீனாவில் நடந்ததாக இரண்டு பேர் அறிவிக்கின்றார்கள் என்றால் இரண்டு பேர் அறிவிப்பது முள்தரப் எனப்படும்.

இந்த முடிவைக் கூட அவசரப்பட்டு எடுத்துவிடக் கூடாது. மக்காவிலும் மதீனாவிலும் இருவேறு சந்தர்ப்பங்களில் நடந்திருக்க முகாந்திரமோ, ஆதாரமோ இருந்தால் அதை முள்தரப் என்று கூறக்கூடாது.

முள்தரப் என்பது இன்னொரு வகையிலும் ஏற்படும்.

ஒரு அறிவிப்பாளர் நேற்று மக்காவில் நடந்ததாகக் கூறி விட்டு, இன்று மதீனாவில் நடந்ததாக அறிவித்தால் அதுவும் முள்தரப் (குழப்பத்தால் நேர்ந்த தவறு) தான்.

கருத்துக்களில் முள்தரப் எனும் நிலை இருப்பது போலவே அறிவிப்பாளர் வரிசையிலும் இந்த நிலை ஏற்படலாம்.

இப்ராஹீம் எனக்கு அறிவித்தார் என்று ஒரு செய்தியை அறிவித்த அறிவிப்பாளர் பின்னொரு சமயத்தில் அப்துல் காதிர் அறிவித்ததாக மாற்றிக் கூறினால் இதுவும் முள்தரப் தான். பெயரில் குழப்பம் ஏற்பட்டதால் இவ்விருவர் அல்லாத மூன்றாவது ஒருவராகவும் அவர் இருக்கக் கூடும். அவர் பலவீனமானவராக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது என்பதால் இதுபோன்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்வதில்லை.

  • 2. மக்லூப் (மாறாட்டம்)

சில நேரங்களில் சில நிகழ்ச்சிகளை ஏறுக்கு மாறாகக் கூறி விடுவோம். இருப்பதாகக் கூறியதை இல்லை என்போம். இல்லை என்று கூறியதை உண்டு என்போம். இப்படி ஏறுக்கு மாறாகவும் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிலால் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நோன்பு பிடியுங்கள் என்ற ஹதீஸ் பலர் வழியாக பல நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிலர், பிலால் இடத்தில் உம்மி மக்தூமையும், உம்மி மக்தூம் இடத்தில் பிலாலையும் போட்டு ஏறுக்கு மாறாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என்றாலும் இத்தகைய தவறுகளிலிருந்து அப்பாற்பட்டவர்கள் இருக்கவே மாட்டார்கள்.

இது போன்ற ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.

கருத்தில் இப்படி ஏற்படுவது போல் அறிவிப்பாளர் விஷயத்திலும் ஏற்படலாம். ஆசிரியரிடத்தில் மாணவரையும் மாணவர் இடத்தில் ஆசிரியரையும் போட்டு விடுவதுண்டு.

  • 3. மஜ்ஹூல் (யாரென அறியப்படாதவர்கள்)

ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரலாற்றுக் குறிப்பு இருக்க வேண்டும். அவ்வாறில்லாதவர்கள் மஜ்ஹூல் எனப்படுவர்.

இஸ்மாயீலின் மகன் ஈஸா என்பவர் அறிவித்ததாக நம்பகமானவர் கூறுகின்றார். நமது சக்திக்கு உட்பட்டு தேடிப் பார்த்தால் அப்படி ஒருவர் பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் மஜ்ஹூல் எனப்படுவார்.

அல்லது இப்படி ஒருவர் இருந்ததாகத் தெரிகின்றது. ஆனால் அவர் எப்போது பிறந்தார்? எப்போது மரணித்தார்? அவரது நம்பகத்தன்மை எத்தகையது? அவரது நினைவாற்றல் எப்படி? என்ற எந்த விபரமும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இவரும் மஜ்ஹூல் தான்.

ஒருவர் நம்பகமானவர் தானா? என்பதைத் தீர்மானிப்பதற்குத் தேவையான தகவல் கிடைக்கப் பெறாத ஒவ்வொருவரும் மஜ்ஹூல் எனப்படுவர்.

இத்தகையோர் அறிவிக்கும் ஹதீஸ்களும் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதன் அடிப்படையில் எந்தச் சட்டமும் எடுக்கப்படக் கூடாது.

இதுவரை பலவீனமான ஹதீஸ்கள் எவ்வாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன என்ற விபரத்தைப் பார்த்தோம்.

யாரைப் பற்றிய செய்தி என்பதைப் பொறுத்தும் ஹதீஸ்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
யாருடைய சொல், செயல், அங்கீகாரம் அறிவிக்கப்படுகின்றது என்ற அடிப்படையில் ஹதீஸ்கள்
வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை மர்ஃபூவு என்றும், நபித்தோழர்கள் சம்பந்தப்பட்டதை மவ்கூஃப் என்றும், அதற்கடுத்த தலைமுறையினர் சம்பந்தப்பட்டதை மக்தூவு என்றும் கூறப்படும்.

இதை விரிவாகப் பார்ப்போம்.
___________________________

  • 1. முஸ்னத், மர்ஃபூவு

முஸ்னத் என்றால் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்கள் முழுமைப்படுத்தப்பட்டது என்று பொருள். மர்ஃபூவு என்றால் சேரும் இடம் வரை சேர்ந்தது என்று பொருள்.

முஸ்னத் என்பது அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்ட பெயர் இல்லை. நபி (ஸல்) அவர்களுடன் தொடர்பு படுத்திக் கூறப்படும் செய்திகளா? இல்லையா? என்ற அடிப்படையில் கூறப்பட்டது தான்.

முஸ்னதாக இருக்கும் ஹதீஸின் அறிவிப்பாளர்களில் அனைவருமோ அல்லது ஒருவரோ நம்பிக்கைக்குரியவராக இல்லாதிருக்கலாம். எனவே அது முஸ்னதாக இருந்தும் ஏற்கத்தகாத ஹதீஸாகி விடும்.

மர்ஃபூவு என்பதும் ஏறக்குறைய முஸ்னதைப் போன்றது தான். எனினும் இரண்டுக்கும் சிறிய வித்தியாசம் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக - செய்ததாக அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸின் இடையில் எந்த அறிவிப்பாளரும் விடுபடாமல் இருந்தால் அது முஸ்னத் எனப்படும்.

மர்ஃபூவு எனக் கூறுவதற்கு இந்த நிபந்தனை இல்லை. அறிவிப்பாளர் இடையில் விடுபட்டிருக்கலாம். அல்லது விடுபடாமல் இருக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது தான் மர்ஃபூவு என்பதன் முக்கிய நிபந்தனையாகும்.

மர்ஃபூவு எனக் கூறப்படும் ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரும் ஆய்வு செய்யப்பட வேண்டும். மர்ஃபூவு என்று கூறியவுடன் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது.

  • 2. மவ்கூஃப்

சில ஹதீஸ்கள் மவ்கூஃப் என்று கூறப்படும். தடைப்பட்டு நிற்பது என்பது இதன் பொருள். இவை அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்டதன்று.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லையோ, செயலையோ, அங்கீகாரத்தையோ அறிவிப்பவை தான் ஹதீஸ்கள் எனப்படும்.

அவ்வாறு இல்லாமல் ஒரு நபித்தோழர் இவ்வாறு செய்தார். இவ்வாறு சொன்னார் என்று ஒரு செய்தி அறிவிக்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இச்செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படவில்லை. இவ்வாறு அமைந்தவை தான் மவ்கூஃப் எனப்படும்.

நம்பகமான அறிவிப்பாளர் வழியாக இது அறிவிக்கப்பட்டால் அந்த நபித்தோழர் அவ்வாறு கூறியது உண்மை என்று எடுத்துக் கொள்ளலாம். அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் இல்லை என்றால் அந்த நபித்தோழர் அவ்வாறு கூறியிருக்க முடியாது என்று கருதிக் கொள்ளலாம்.

நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக நபித்தோழர் கூறியது நிரூபிக்கப்பட்டாலும் மார்க்கத்தில் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியவை மட்டும் தான் ஆதாரமாக ஆக முடியும். மற்றவர்களின் கூற்று எவ்வளவு நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் நபித்தோழர்களின் கூற்று என்பது தான் உறுதியாகுமே தவிர அது நபிகள் நாயகத்துடன் சம்பந்தப்படாது.

சில செய்திகள் மேலோட்டமாகப் பார்க்கும் போது மவ்கூஃப் போன்று தோற்றமளித்தாலும் அதை மவ்கூஃப் என்று கூற முடியாத வகையில் அமைந்திருக்கும்.

நாங்கள் நபி (ஸல்) காலத்தில் இப்படிச் செய்தோம்''
எங்களுக்கு இவ்வாறு கட்டளையிடப் பட்டிருந்தது'' என்பது போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் நபித்தோழர்களுக்கு மார்க்கக் கட்டளை பிறப்பித்திருக்க முடியாது.

நபி (ஸல்) காலத்தில் நபித்தோழர்கள் ஒன்றைச் செய்தார்கள் என்று கூறப்பட்டால் அது நபி (ஸல்) அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டும் தடுக்கவில்லை என்று பொருள் கொள்ள வேண்டும். எனவே இதை மவ்கூஃப் என்று கூறக்கூடாது என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் இதற்கு மாற்றுக் கருத்தும் கொள்கின்றனர்.

மவ்கூஃபுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சொல் முஸ்னத் என்பதாகும்.

முஸ்னத் என்றால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்தியாகும். மவ்கூஃப் என்றால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்படாத செய்தி என்று பொருள்.

  • 3. மக்தூவு (முறிக்கப்பட்டது)

நபித்தோழர்களின் சொல் செயல்களைக் கூறும் ஹதீஸ்கள் மவ்கூஃப் என்று கூறுவது போல் நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினரான தாபியீன்களின் சொல் செயல்களைக் கூறும் ஹதீஸ்கள் மக்தூவு எனப்படும். நபித்தோழர்களின் கூற்றே மார்க்க ஆதாரமாக ஆகாது எனும் போது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினரின் சொல்லோ செயலோ மார்க்க ஆதாரமாக ஆகாது என்பதில் சந்தேகம் இல்லை.

எத்தனை நபர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

1. முதவாதிர் (ஒருமித்து அறிவிக்கப்படுவது)

ஒரு செய்தியை ஒருவர், இருவர் அல்ல, ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். ஒவ்வொரு கால கட்டத்திலும் இவ்வாறு ஏராளமானவர்கள் அறிவித்துள்ளனர் என்றால் இத்தகைய செய்திகளை முதவாதிர் என்று கூறுவர்.

மக்கா எனனொரு நகரம் உள்ளது என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் எண்ணற்றவர்கள் அறிவித்துள்ளனர். பத்ருப் போர் என்றொரு போர் நடந்தது என்பது இதுபோல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திகள் ஹதீஸ்களிலேயே மிகவும் பலமானவை. எக்காரணம் கொண்டும் நிராகரிக்கப்பட முடியாதவை.

நம்பகமான ஒருவர் மூலம் உங்களுக்கு ஒரு ஹதீஸ் கிடைக்கின்றது. அதை நீங்கள் ஒரு லட்சம் பேருக்கு அறிவிக்கின்றீர்கள். அந்த ஒரு லட்சம் பேரும் அடுத்த தலைமுறையினருக்கு அறிவிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இது முதவாதிர் என்று கருதப்படாது. ஏனெனில் அந்த ஒரு லட்சம் பேரும் உங்கள் ஒருவர் வழியாகத் தான் அறிந்தனர். நீங்கள் ஒரே ஒருவர் மூலமாகத் தான் அறிந்தீர்கள். எல்லா மட்டத்திலும் ஏராளமான பேர் அறிவித்தால் மட்டுமே அதை முதவாதிர் எனலாம்.

நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்தனர். அவர்களிடம் கேட்ட ஏராளமான தாபியீன்கள் ஏராளமான தபவுத் தாபியீன்களுக்கு அறிவித்தனர். இப்படியே தொடர்ந்து இந்தச் செய்தி நம்மை வந்தடைந்துள்ளது. இன்றைக்கு 150 கோடி முஸ்லிம்களும் இந்தச் செய்தியை அடுத்த தலைமுறையினருக்கு அறிவிக்கின்றார்கள். இது தான் முதவாதிர் எனப்படும்.

குர்ஆனை அல்லாஹ்வுடைய வேதம் என்று முதவாதிரான ஹதீஸ்களின் துணையுடன் நம்புகிறோம்.
இப்படி அமைந்த ஹதீஸ்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. அதற்கு உதாரணம் காட்டும் அறிஞர்கள் அனைவரும், யார் என் பெயரால் ஒரு செய்தியை இட்டுக் கட்டிக் கூறுகின்றாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்'' என்ற ஹதீஸைத் தான் உதாரணம் காட்டுகின்றனர். இதை அறுபதுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர். இப்படியே

தலைமுறை தோறும் எண்ணற்றவர்கள் வழியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ஹபருல் வாஹித் (தனிநபர் அறிவிப்பது)

இவ்வாறு அமையாத ஹதீஸ்களை ஹபருல் வாஹித் என்பர். தனிநபர்களின் அறிவிப்பு என்பது இதன் பொருள்.

இதையும் பல வகைகளாகப் பிரித்துள்ளனர். மஷ்ஹூர், கரீப், அஸீஸ் என்று பல வகைகளாகப் பிரித்துள்ளனர்.

இவையெல்லாம் எத்தனை அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளனர் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டவையாகும். நம்பகமானவர்களா? இல்லையா? என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டவை அல்ல.

எந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளலாம்? என்பதை அறிந்திட மேற்கண்ட விபரங்களே போதுமானவையாகும். இவை தவிர இன்னும் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஹதீஸ்களை வகைப்படுத்தியுள்ளனர். விரிவஞ்சி அவற்றைத் தவிர்த்துள்ளோம்.

ஆதார நூற்கள்

இதுவரை நாம் கூறிய விபரங்களில் வேறு விதமான விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. இப்னு ஜமாஆ, சுயூத்தி ஆகிய அறிஞர்களின் வகைப்படுத்துதலே எளிமையாக உள்ளதால் அதன் அடிப்படையிலேயே இந்த விபரங்களை முன் வைத்துள்ளோம். சுயூத்தியின் தத்ரீபுர்ராவீ, இப்னு ஜமாஆவின் அல்மன்ஹல் ஆகிய நூற்களே இக்கட்டுரைக்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்டுள்ளன.

இன்ஷால்லாஹ் இன்னும் இத்துடன் தொடர்பான வேறு தகவல்கள் தொடரும் ..
 _______________________________________________
Jazakallah www.onlinepj.com